அரசு பள்ளி தத்தெடுப்பு திட்டத்தில் தொய்வு

Monday, October 12, 2009


நன்றி: தினமலர்

உள்ளூர் பகுதிகளைச் சேர்ந்த செல்வந்தர்கள், தொழிலதிபர்கள், தங்கள் பகுதியில் உள்ள அரசுப் பள்ளிகளை தத்தெடுத்து தேவையான கட்டமைப்பு வசதிகளை செய்து கொடுக்கும் திட்டம், தற்போது தொய்வடைந்துள்ளது.

இதற்கு, அதிகாரிகளின் போதிய ஒத்துழைப்பின்மை மற்றும் ஐந்து லட்ச ரூபாய் கொடுத்தால், பள்ளிக்கு தாங்கள் விரும்பும் பெயர்களை சூட்டலாம் என்றிருந்த அரசாணை ரத்து போன்றவை, முக்கிய காரணங்களாக உள்ளன. தமிழகத்தில் இயங்கும் பள்ளிகளில், பெரும்பான்மையாக அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் தான் உள்ளன. 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு, முழுமையான உள் கட்டமைப்பு வசதிகளை அரசே செய்து கொடுப்பது என்பது சிரமம் தான்.

இதை அறிந்து தான், அரசுப் பள்ளிகளுக்கு தேவையான கட்டமைப்பு வசதிகளை உள்ளூர் வி.ஐ.பி.,க்கள் செய்து தரவும், அதற்காக பள்ளியில் நன்கொடையாளர்கள் விரும்பும் பெயரை வைத்துக் கொள்ளவும் அரசு அனுமதித்தது. இதனால், பலர் அரசுப் பள்ளிகளின் வசதிகளை மேம்படுத்தினர். கடந்த சில ஆண்டுகளாக இந்த திட்டத்தில் பெரும் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதற்கு, மாவட்ட அளவில் உள்ள அதிகாரிகளின் ஒத்துழைப்பின்மை முக்கியக் காரணமாக இருக்கிறது.

அரசுப் பள்ளிகளை மேம்படுத்த முன்வரும் நன்கொடையாளர்களை, உரிய முறையில் அணுகாமல் அலைய விடுவதாலும், திட்டத்தில் போதிய ஆர்வம் காட்டாததாலும் இந்த திட்டம் தற்போது முடங்கிப் போயுள்ளது. அரசுப் பள்ளிகளுக்கு, ஐந்து லட்ச ரூபாய் நன்கொடை அளித்தால், அந்தப் பள்ளிக்கு நன்கொடையாளர் விரும்பும் பெயரை சூட்டலாம் என்று அரசாணை இருந்தது. இந்த அரசாணை ரத்து செய்யப்பட்டு விட்டதாக, பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நன்கொடை திட்டம் குறைந்துபோனதற்கு, இது ஒரு முக்கியக் காரணம் என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தற்போதைய திட்டத்தின்படி, பள்ளிக்குத் தேவையான வகுப்பறைகள் அல்லது ஆய்வகங்கள் போன்ற வசதிகளை, நன்கொடையாளர்கள் செய்து தரலாம் என்றும், அந்த குறிப்பிட்ட அறைக்கு மட்டும் நன்கொடையாளர்கள் விரும்பிய பெயரை சூட்டலாம் என்றும் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த மூன்று ஆண்டுகளில், அரசுப் பள்ளி மேம்பாட்டு திட்டத்தில், நன்கொடையாளர்களின் பங்கு சொல்லும்படியாக இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அடுத்த கல்வியாண்டில் சமச்சீர் கல்வி திட்டம் அமலுக்கு வரும் நிலையில், பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளை அதிகரிக்க வேண்டிய அவசியம் உள்ளது. சமச்சீர் கல்வி திட்டம் குறித்து ஆய்வு செய்த முன்னாள் துணைவேந்தர் முத்துக்குமரன், "சமச்சீர் கல்வி என்பது வெறும் பாடத் திட்டம் மட்டும் கிடையாது;

அரசு மற்றும் நிதியுதவி பெறும் பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளை பெருக்க வேண்டும்' என்று வலியுறுத்தியுள்ளார். சமீபத்தில், சென்னையில் நடந்த கருத்தரங்கு ஒன்றிலும், இந்தக் கருத்தை முன்னாள் துணைவேந்தர் முத்துக்குமரன் உள்ளிட்ட கல்வியாளர்கள் வலியுறுத்தினர். பள்ளிகளில் எந்தவித வசதிகளும் இல்லாமல், பாடத் திட்டத்தை மட்டும் பொதுவாக வழங்கி விட்டால், அதனால் எந்தவித மாற்றங்களும் ஏற்படாது.

அரசுப் பள்ளி மேம்பாட்டு திட்டத்தில் செல்வந்தர்களையும், தொழிலதிபர்களையும் பங்கேற்குமாறு அரசு வேண்டுகோள் விடுக்க வேண்டும். நன்கொடையாளர்கள் விரும்பும் பெயர்களை பள்ளிக்கு சூட்டவும், கூடுதல் கட்டடங்களுக்கு பெயர் சூட்டிக் கொள்ளவும் வழிவகை செய்ய வேண்டும். நன்கொடையாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்காத அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு நினைத்தால், இந்த திட்டத்தை பெரிய அளவில் மக்களிடம் எடுத்துச் சென்று, அதன் மூலம் அரசுப் பள்ளிகளின் வசதிகளை கண்டிப்பாக மேம்படுத்த முடியும் என்ற கருத்து எழுந்திருக்கிறது.

0 comments:

Donate a Link for Green World - NGO

You can donate a link from your blog or website for Green World - NGO, A Non-Profit Social Welfare Organization functioning at Erode.
This is what you will see.



Optionally use this Widget installer to add this link to your blogger blog.

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP